செய்திகள்

நிலக்கோட்டையில் இன்று நடக்க இருந்த பிளஸ்-2 மாணவன், மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2018-09-12 09:36 GMT   |   Update On 2018-09-12 09:36 GMT
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இன்று பிளஸ்-2 மாணவியுடன் மாணவனுக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயது மாணவனுக்கும் அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக காதல் ஏற்பட்டது.

இந்த காதலுக்கு மாணவர் வீட்டில் எதிர்ப்பு ஏற்பட்டது. எனவே இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவி வீட்டுக்கு செல்லாமல் தனது காதலனுடன் சென்று தங்கினார்.

பின்னர் இன்று திருமணம் செய்வதற்காக நண்பர்கள் உதவியுடன் பொருட்களை வாங்கிக் கொண்டு ஒரு இடத்தில் தங்கி இருந்தனர்.

இது குறித்த தகவல் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே அவர்களை தீவிரமாக தேடினர். மேலும் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தரப்பட்டது. அமலாராணி தலைமையிலான குழுவினர் அவர்களை தேடிய போது இருவரும் திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்து வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து மாணவியை திண்டுக்கல்லில் உள்ள ஒரு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். மாணவனின் பெற்றோரிடம் எடுத்து கூறி அவனுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News