செய்திகள்
விபத்துக்குள்ளான அரசு பஸ்

சூலூரில் நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து- கல்லூரி பெண் ஊழியர் பலி

Published On 2018-09-07 04:17 GMT   |   Update On 2018-09-07 04:17 GMT
சூலூரில் இன்று காலை நின்ற லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கல்லூரி பெண் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 7 பயணிகள் படுகாயமடைந்தனர்.
சூலூர்:

திருச்சியில் இருந்து கோவைக்கு இன்று அதிகாலை ஒரு அரசு பஸ் புறப்பட்டு வந்தது.

காலை 5.45 மணி அளவில் சூலூர் பெட்ரோல் பங்க் பகுதியில் வந்த போது, அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக பஸ் மோதியது.

இதில் பஸ்சின் முன்புறம் நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் சிலர் படுகாயம் அடைந்து அலறித் துடித்தனர். அப்பகுதி பொது மக்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதில் திருச்சி சமயபுரத்தை சேர்ந்த தனியார் கல்லூரி பெண் ஊழியரான அழகு ஜோதி (வயது 28) என்பவர் பரிதாபமாக இறந்தார். இவர் வேலை விசயமாக கோவைக்கு வந்த போது விபத்தில் சிக்கி இறந்துள்ளார். கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த பரிமளம்(60), சித்ரா (48), பவித்ரா(23), முத்துலட்சுமி (50), மதுக்கரையை சேர்ந்த சின்னம்மாள்(50), போத்தனூரை சேர்ந்த சாம்சன் (56), புதுக்கோட்டையை சேர்ந்த பாண்டி ஆகிய 7 பேர் அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூரை சேர்ந்த வீரப்பன் (47) என்பவர் சிமெண்டு லோடு ஏற்றுவதற்காக லாரியை ஓட்டி வந்துள்ளார். இவர் சாலையோரம் லாரியை நிறுத்தி விட்டு கடைக்கு சென்ற போது தான் விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News