செய்திகள் (Tamil News)
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்த உதயகுமார்.

நடிகர் விசு, அவதூறாக பேசி மிரட்டல் விடுக்கிறார்- சுப.உதயகுமார் புகார்

Published On 2018-09-06 11:25 GMT   |   Update On 2018-09-06 11:25 GMT
காணொலி காட்சிகள் மூலம் நடிகர் விசு, அவதூறாக பேசி மிரட்டல் விடுப்பதாக நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் சுப.உதயகுமார் புகார் அளித்துள்ளார்.
நாகர்கோவில்:

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளரும், பச்சை தமிழகம் அமைப்பின் தலைவருமான சுப. உதயகுமார் இன்று நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நடிகர் விசு பேசும் காணொலி காட்சி ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில் நடிகர் விசு என் பெயரை குறிப்பிட்டு மிகவும் அநாகரீகமாக பேசியுள்ளார்.

இது பற்றி நான் அவருக்கு என் முகநூல் வழியாக ஒரு வேண்டுகோள் விடுத்தேன். என்னை பற்றி பேசும் அவதூறு கருத்துக்களை நீக்கிவிடும்படி கூறியிருந்தேன்.

ஆனால் அவர் அக்காட்சிகளை நீக்காமல் என்னை மீண்டும் அவதூறாகவும், உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறியும் விமர்சித்து இருந்தார்.

இது பற்றி நான் சென்னையில் உள்ள போலீஸ் கமி‌ஷனர் அலுவலத்தின் சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுத்தேன். அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நடிகர் விசு எனக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்து ஆபாசமாக பேசி வருகிறார்.

நடிகர் விசுவின் கருத்துக்களால் நானும், என் குடும்பத்தினரும் மிகவும் மன உளைச்சலில் உள்ளோம். எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இப்புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடிகர் விசுவால் பாதிக்கப்பட்டுள்ள எனக்கும், என் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News