செய்திகள்

லஞ்சம் வாங்கி கைதான பெண் அதிகாரி சஸ்பெண்டு

Published On 2018-08-30 14:49 GMT   |   Update On 2018-08-30 14:49 GMT
அரூரில் லஞ்சம் வாங்கி கைதான பெண் அதிகாரியை சஸ்பெண்டு செய்து தலைமை வன பாதுகாவலர் உத்தரவிட்டு உள்ளார்.
தருமபுரி:

அரூரில் வனக்கோட்ட பொறியியல் பிரிவில் வனவராக பணிபுரிந்து வருபவர் ரவிச்சந்திரன். இவர், தன்னுடைய பொது சேம நல நிதியில் (ஜி.பி.எப்.) இருந்து ரூ.2 லட்சத்து 62 ஆயிரம் கடன் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார். இந்த கடனுக்கான பட்டியல் அனுமதிக்கோரி (பில் பாஸ் செய்வதற்காக) அதே துறையில் பணிபுரியும் கண்காணிப்பாளர் தனலட்சுமியை வனவர் ரவிச்சந்திரன் அணுகியுள்ளார்.

இந்த கடனுக்கான பட்டியல் அனுமதி அளிக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கண்காணிப்பாளர் தனலட்சுமி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வனவர் ரவிச்சந்திரன் தருமபுரியில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் செய்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில், டி.எஸ்.பி.க்கள் சுப்பிரமணியன் (தருமபுரி), கிருஷ்ணராஜன் (கிருஷ்ணகிரி), போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா ஆகியோர் அடங்கிய லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வனக்கோட்ட பொறியியல் அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழங்கிய ரசாயன பவுடர் தடவிய 500 ரூபாய் நோட்டுகள் நான்கினை கண்காணிப்பாளர் தனலட்சுமியிடம், வனவர் ரவிச்சந்திரன் கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தனலட்சுமியை கையும் களவமாக பிடித்தனர். தொடர்ந்து, அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தனலட்சுமியை கைது செய்தனர். பின்னர் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர். தற்போது அவரை சஸ்பெண்டு செய்து தலைமை வன பாதுகாவலர் உத்தரவிட்டு உள்ளார்.
Tags:    

Similar News