செய்திகள்

மு.க.ஸ்டாலின் மீது விமர்சனம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு திருநாவுக்கரசர் கண்டனம்

Published On 2018-08-29 08:06 GMT   |   Update On 2018-08-29 08:06 GMT
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கட்சியில் படிப்படியாக பதவிகளில் இருந்து உயர்ந்தவர். அப்படிப்பட்டவரை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சிப்பது கண்டனத்துக்குரியது என்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். #DMK #Thirunavukkarasar
கோவை:

கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்று அவர் கூடுதலாக சில பகுதிகளுக்கு செல்வதால் அவர் கோவை வருவதில் தாமதம் ஆகி இருக்கிறது என்றார்.

கேள்வி-எத்தனை கட்சிகள் கூட்டணி வைத்தாலும் பா.ஜனதாவை வீழ்த்த முடியாது என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சொல்லி இருக்கிறாரே?

பதில்- பொன்.ராதாகிருஷ்ணன் அப்படித்தான் சொல்லி ஆக வேண்டும். தமிழகத்தில் பா.ஜனதா கட்சிக்கு வாய்ப்பே இல்லை. தமிழகத்தில் பா.ஜனதா இப்போதும் வீழ்ந்து தான் கிடக்கிறது. அதை வீழ்த்தவேண்டிய அவசியம் இல்லை.

கேள்வி- மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக தகுதி கிடையாது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியிருக்கிறாரே?

பதில்- தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கட்சியில் படிப்படியாக பதவிகளில் இருந்து உயர்ந்தவர். அனுபவம் மிக்கவர். அப்படிப்பட்டவரை அமைச்சராக இருக்கும் தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சிப்பது, தரம் தாழ்ந்து பேசுவது கண்டனத்துக்குரியது.

கேள்வி-நீங்கள் பா.ஜனதாவுக்கு சென்றால் காங்கிரசுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருக்கிறாரே?

பதில்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் யோசனைகளுக்கு நன்றி. அவர், அவரது எதிர்காலத்தை பற்றி முடிவு செய்யட்டும். அவர் இது போன்று பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

கேள்வி-அ.தி.மு.க.வின் உட்கட்சி பூசல் பற்றி என்ன கருதுகிறீர்கள்.

பதில்- ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் விரிசல் ஏற்பட்டு உடைந்து இருக்கிறது. மதுசூதனனுக்கும், அமைச்சர் ஜெயகுமாருக்கும் இடைப்பட்ட பிரச்சினையை பஞ்சாயத்து செய்யும் நிலையில் முதல்-அமைச்சர் இருக்கிறார். ஒரே தலைமை இல்லாமல் இரட்டை குதிரையில் அ.தி.மு.க. சவாரி செய்வதால் கட்சியும், ஆட்சியும் சரியில்லாமல் இருக்கிறது. அ.தி.மு.க. போய் சேரவேண்டிய இடம், போய் சேராது.

இவ்வாறு அவர் கூறினார். #DMK #Thirunavukkarasar
Tags:    

Similar News