செய்திகள்

கொடைக்கானலில் 700 அடி பள்ளத்தில் விழுந்த புகைப்பட கலைஞர் உயிருடன் மீட்பு

Published On 2018-08-25 03:23 GMT   |   Update On 2018-08-25 03:23 GMT
கொடைக்கானலில் 700 அடி பள்ளத்தில் விழுந்த புகைப்பட கலைஞர் உயிருடன் மீட்கப்பட்டார்.
கொடைக்கானல்:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணி (வயது 24). இவர் டால்பின் நோஸ் என்ற சுற்றுலா பகுதியின் அருகே உள்ள எதிரொலிக்கும் பாறையில் சுற்றுலா பயணிகளை புகைப்படம் எடுக்கும் வேலை செய்து வருகிறார்.

அவர் நேற்று பகலில் ஒரு சுற்றுலா பயணிக்கு புகைப்படம் எடுக்கும்போது பாறையில் இருந்து சுமார் 700 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இச்சம்பவத்தால் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அச்சத்தால் உறைந்தனர்.

இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்களும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் சுமார் 700 அடி பள்ளத்தில் இறங்கி தேடி மணியை மீட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கயிறு கட்டி மணியை மேலே கொண்டு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இச்சம்பவம் கொடைக்கானல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News