செய்திகள்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்றபோது எடுத்தபடம்.

நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

Published On 2018-08-25 03:10 GMT   |   Update On 2018-08-25 03:10 GMT
நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை 16 கண் பாலம் பகுதியில் பாறைகள் தெரிய தொடங்கின. #Hogenakkal #Cauvery
பென்னாகரம்:

கர்நாடகா, கேரள மாநிலங்களில் பெய்த கனமழையால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இந்த அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து குறைந்து நேற்று வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே ஒகேனக்கல்லுக்கு வந்தது.

இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் இயக்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது. கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து சின்னாறு வழியாக மணல் திட்டு வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதனால் 15 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் உற்சாகத்துடன் பரிசல் சவாரி செய்தனர்.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. இதன் காரணமாக அணையின் உபரிநீர் 16 கண் பாலம் வழியாக திறந்து விடப்பட்டது.

நீர்வரத்து குறைந்ததால் நேற்று முன்தினம் இரவு அணையில் இருந்து உபரிநீர் திறப்பது அடியோடு நிறுத்தப்பட்டது. இதனால் 16 கண் பாலம் பகுதியில் உள்ள பாறைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. கடந்த 2 வாரத்தில் மட்டும் மேட்டூர் அணையில் இருந்து 110 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  #Hogenakkal #Cauvery

Tags:    

Similar News