ஈரோடு மாவட்டத்தில் அழகிரிக்கு ஆதரவாக கூடிய ரகசிய கூட்டம்
சென்னிமலை:
தி.மு.க.வில் உள்ள எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைக்க ஈரோடு மாவட்டத்தில் அழகிரி ஆதரவாளர்கள் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பெருந்துறை சுகுணா சக்தி என்கிற சக்திவேல் செயல்படுகிறார். தி.மு.க.வில் கருணாநிதி இறந்த பின்பு நடந்த செயற்குழுவில் அழகிரிக்கு அழைப்பு இல்லாமல் இருப்பது இன்னும் அழகிரியை கட்சியில் சேர்க்காமல் இருப்பது அழகிரி ஆதரவாளர்கள் மட்டத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.
அடுத்த மாதம் 5-ந் தேதி கருணாநிதி சமாதியில் அழகிரி தலைமையில் ஆதரவாளர்கள் திரண்டு ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் மும்மராக நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் இருந்தும் கணிசமான தொண்டர்களை அழைத்து செல்ல சத்தம் இல்லாமல் ஒருங்கிணைப்பு வேலை நடக்கிறது.
ஈரோடு மாவட்ட தி.மு.க.,வை பொறுத்த அளவில் எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைப்பது, மாஜி மாவட்ட செயலாளர் ராஜா அணியில் இருந்து தற்போது விலகி இருப்பவர்களை பார்த்து அழகிரி அணிக்கு இழுக்கும் வேலை தொடங்கி விட்டது.
சென்னிமலை அப்பாய் செட்டியார் வீதியில் உள்ள தனியார் கடையில் அழகிரி ஆதரவாளர்கள் கூட்டம் மிக ரகசியமாக நடந்ததுள்ளது. இதில் தற்போது ஈரோடு மாவட்டத்தில் அழகிரி அணியில் தீவிரமாக செயல்படும் பெருந்துறை அருகே வசிக்கும் சுகுணா சக்தி என்ற சக்திவேல் கலந்து கொண்டுள்ளார்.
அவர் பேசும்போது, ‘‘அழகிரி அண்ணன் சொல்லி விட்டார் அஞ்சலி கூட்டத்திற்கு நமது மாவட்டத்தில் இருந்து குறைந்தது 10 பஸ்களில் செல்ல வேண்டும். ஒதுங்கி உள்ள நிர்வாகிகள் மற்றும் லோக்கல் எதிர் கோஷ்டியினர் என்று பலரிடமும் சொல்லி ஆதரவு திரட்டுங்கள். வருங்காலத்தில் தி.மு.க., அரியணை ஏற வேண்டும் எனில் அழகிரி அண்ணனால் தான் முடியும்’’ என பேசி உள்ளர்.
அதே போல் கொடுமுடி, பெருந்துறை, மொடக்குறிச்சி பகுதிகளிலும் ரகசிய கூட் டம் நடந்துள்ளது.
இது குறித்து சுகுணா சக்தியை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘இப்போது எதுவும் பேச முடியாது. உங்கள் கேள்விகளுக்கு எல்லாம் விரைவில் விடை தெரியும். அழகிரியின் பலம் மெரினாவில் நிரூபிக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.ரகசிய கூட்டம் நடத்தவில்லை. தி.மு.க.வில் உள்ள எனது நண்பர்களை தான் சந்தித்து வந்தேன்’’ என்றார். #dmk #alagiri