செய்திகள்

பெரம்பலூர் அருகே குழந்தைக்கு வி‌ஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை முயற்சி

Published On 2018-08-11 05:17 GMT   |   Update On 2018-08-11 05:17 GMT
பெரம்பலூர் அருகே 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் அருகே உள்ள கல்லப்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 35). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜ லட்சுமி (வயது 29). இவர்களுக்கு சஞ்சனாத்ஸ்ரீ (5), சிவனாத்ஸ்ரீ (3) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சிலம்பரசனுக்கும், ராஜலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ராஜலட்சுமி கணவருடன் கோபித்து கொண்டு தனது 2 குழந்தைகளுடன், பூலாம்பாடியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனிடையே சிலம்பரசன் ராஜலட்சுமிக்கு போன் செய்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தண்ணீரில் எலிமருந்தை கலந்து, தனது 2 குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு அவரும் குடித்து விட்டார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிவனாத்ஸ்ரீ பரிதாபமாக இறந்தாள். ராஜலட்சுமி, சஞ்சனாத்ஸ்ரீ ஆகியோர் உயிருக்கு போராடி வருகிறார்கள். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜ லட்சுமியின் நடத்தையில், சிலம்பரசன் சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிகிறது.
Tags:    

Similar News