செய்திகள்

கணவருடன் சேர்த்து வைத்ததால் ஆத்திரம்- 8 பேர் சேர்ந்து வாலிபரை அடித்து கொன்ற கொடூரம்

Published On 2018-08-10 15:39 IST   |   Update On 2018-08-10 15:39:00 IST
கணவருடன் சேர்த்து வைத்த ஆத்திரத்தால் அண்ணி உள்பட அவரது உறவினர்கள் சேர்ந்து வாலிபரை அடித்தே கொன்றனர். இந்த கொடூர சம்பவம் சமூக வலை தலங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஈரோடு:

ஈரோடு அருகே பெரிய சேமூர் கல்லாங்கரடு ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் முத்து. இவருக்கு 2 மகன்கள்.மூத்த மகன் மணி. இளைய மகன் செல்வகுமார் (வயது 25). இவர் விசைத்தறி தொழிலாளியாக இருந்தார்.

இவரது மனைவி பெயர் லீலாவதி (22). சுதர்சன் என்ற 2 வயது மகன் உள்ளான். செல்வகுமாரின் அண்ணன் மணிக்கும் அவரது மனைவி லட்சுமிக்கும் குடும்பத்தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் கோபித்துக்கொண்டு லட்சுமி திடீரென மாயமாகி விட்டார்.

இந்த நிலையில் தனது அண்ணி சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருப்பதை செல்வகுமார் அறிந்தார். இதனால் தனது அண்ணியை எப்படியாவது அண்ணனிடம் சேர்த்து வைக்க வேண்டும் என்று செல்வகுமார் எண்ணி சங்ககிரிக்கு சென்றார்.

அங்கு தனது அண்ணியை பார்த்து பேசி வலுக்கட்டாயமாக அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமிக்கு கொளுந்தன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தார். நேற்று மதியம் லட்சுமி தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக செல்வகுமார் வந்தார். அவரை பார்த்ததும் லட்சுமிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. ‘‘எனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை என்று தானே சென்றேன். நான் இருந்த இடத்துக்கு வந்து வலுக்கட்டாயமாக ஏன் இங்கு அழைத்து வந்தாய்?’’ என்று லட்சுமி கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

இருவருக்கும் கடும்வாக்கு வாதம் ஏற்பட்டது. அருகில் கிடந்த கட்டையை எடுத்த லட்சுமி செல்வகுமாரை சரமாரியாக தாக்கினார்.அப்போது லட்சுமியின் உறவினர்கள் 6 பேர் அங்கு வந்தனர். 2 இளம்பெண்கள், 2 வயதான பெண்கள், 2 ஆண்கள் உள்பட 8 பேர் சேர்ந்து கொண்டு செல்வகுமாரை சுற்றி வளைத்து அடித்தனர்.

அவர்களிடம் இருந்து தப்புவதற்காக செல்வகுமாரும் அவர்களை திருப்பி தாக்கினார். எனினும் 8 பேர் சேர்ந்து தாக்கியதால் செல்வகுமார் நிலை குலைந்து மயங்கி விழுந்தார்.



உடனடியாக அக்கம் பக்கத்தினர் சேர்ந்து அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே செல்வகுமார் இறந்து விட்டதாக கூறினர்.

செல்வகுமாரை 8 பேர் சேர்ந்து தாக்கியபோது அந்த வழியாக வந்த ஒருவர் அதனை தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.

செல்வகுமாரை தாக்கி அவர் மயங்கி விழும் வரை வீடியோவாக பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோ காட்சியை அந்த நபர் ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசில் கொடுத்துள்ளார். போலீசார் அந்த வீடியோ காட்சியை வைத்து லட்சுமி உள்பட 4 பேரை அடையாளம் கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாலிபரை அவரது அண்ணி உள்பட உறவினர்களே வீதியில் சரமாரியாக அடித்து கொன்ற சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News