செய்திகள்
விபத்தில் சிக்கிய கார் நொறுங்கி கிடக்கிறது.

செங்கல்பட்டு அருகே கார் விபத்தில் தி.மு.க. பிரமுகர் பலி

Published On 2018-08-09 06:40 GMT   |   Update On 2018-08-09 06:40 GMT
செங்கல்பட்டு அருகே கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது கார் விபத்தில் தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கல்பட்டு:

விருதுநகர் மாவட்டம் வீரசோழம் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 50). தி.மு.க.வில் கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை மாவட்ட துணைச் செயலாளராக இருந்தார்.

இவர் நேற்று நடந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதிஅஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதே பகுதியை சேர்ந்த கட்சி தொண்டர்கள் 7 பேருடன் காரில் சென்னை நோக்கி வந்தார். டிரைவர் ஜெயமுருகன் காரை ஓட்டினார். மதுராந்தகம் அருகே வந்த போது தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர் ஜெயமுருகனை ஓய்வு எடுக்குமாறு கூறிவிட்டு மணிவண்ணன் காரை இயக்கினார்.

செங்கல்பட்டை அடுத்த புலிப்பாக்கம் அருகே சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலை தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது.

இதில் மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வந்த டிரைவர் ஜெயமுருகன், பெரியசாமி, மாரிமுத்து, செல்லத்துரை, தங்கப்பாண்டியன், ஜோசப் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்த 6 பேருக்கும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பலியான மணிவண்ணனுக்கு பாக்யலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். விபத்து குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News