செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் 2 அரசு பஸ்கள் மீது கல்வீச்சு

Published On 2018-07-31 04:04 GMT   |   Update On 2018-07-31 04:04 GMT
கருணாநிதி உடல் நிலை குறித்து வெளியான முரண்பட்ட தகவலால் விழுப்புரம் மாவட்டத்தில் 2 அரசு பஸ்கள் மீது மர்மநபர்கள் கல்வீசினர்.
செஞ்சி:

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து முரண்பட்ட தகவல் பரவிவருவதால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்களும் குறைந்த அளவே இயங்கின.

இந்த நிலையில் சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ் செஞ்சி அருகே வளத்தி கூட்டுசாலை அருகில் வரும்போது ஒரு வாலிபர் பஸ்சின் மீது கல்வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கி விழுந்தது. உடனே அவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.

இது குறித்து செஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து என்.ஆர்.பேட்டையை சேர்ந்த சரத்பாபுவை (வயது 37) கைது செய்தனர்.

இதேபோல் நெய்வேலியில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ் விழுப்புரம் அருகே சின்னக்கள்ளிப்பட்டு என்ற இடத்தில் சென்றபோது மர்ம மனிதர்கள் அந்த பஸ்சின் மீது கல்வீசி தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

இதுகுறித்து வளவனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News