செய்திகள்
கொலையுண்ட கமலக்கண்ணன்

ஊரப்பாக்கம் அருகே ஏரியில் புதைக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் உடல் தோண்டி எடுப்பு

Published On 2018-07-30 11:53 IST   |   Update On 2018-07-30 11:53:00 IST
தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கத்தில் பெண் தகராறில் எரியில் புதைக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
செங்கல்பட்டு:

தாம்பரத்தை அடுத்த கடப்பேரி முத்தமிழ் நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 30). தாம்பரம் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று அவரது தலை மட்டும் துண்டிக்கப்பட்டு ஊரப்பாக்கம் ராஜீவ் காந்தி நகர் 1-வது தெருவில் கிடந்தது.

கூடுவாஞ்சேரி போலீசார் தலையை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது உடலை காணவில்லை. அதனை தேடி வந்தனர்.

கூடுவாஞ்சேரி, வண்டலூர் காட்டுப்பகுதி, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தியும் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரப்பாக்கத்தை அடுத்த மீனாட்சிபுரம் அய்யஞ்சேரி ஏரியில் சந்தேகத்திற்கிடமாக மூடப்பட்டு இருந்த இடத்தை போலீசார் கண்டு பிடித்தனர்.

அதில் தோண்டி பார்த்த போது தலை இல்லாத உடல் மட்டும் இருந்தது. அது கமலக்கண்ணனின் உடல் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து மீட்கப்பட்ட உடலை பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக மகேந்திரன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். கமலக்கண்ணனின் தலை ஒரு பெண்ணின் வீட்டு முன்பு கிடந்தது. அந்த பெண்ணுக்கும் மகேந்திரனுக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது.

இதையடுத்து பெண் தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுவரை இந்த வழக்கில் யாரும் சிக்கவில்லை.

இதனால் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் பற்றிய தகவல் கிடைக்காமல் போலீசார் திணறி வருகிறார்கள். மகேந்திரன் சிக்கினால் தான் கமலக்கண்ணனின் கொலையில் உள்ள மர்மம் விலகும்.
Tags:    

Similar News