செய்திகள்

ஆசிரியரை காதலித்த ஆசிரியை போலீசில் தஞ்சம்- பெற்றோருடன் செல்ல மறுப்பு

Published On 2018-07-21 16:09 GMT   |   Update On 2018-07-21 16:09 GMT
திருவட்டாரில் ஒரே பள்ளியில் பணியாற்றியபோது ஆசிரியரை காதலித்த ஆசிரியைக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசில் தஞ்சம் அடைந்தார்.
தக்கலை:

திருவட்டார் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தக்கலை பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவர் வேலை பார்த்து வந்தார்.

இதே பள்ளியில் வெண்டலிக்கோடு பகுதியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் ஒருவரும் வேலை பார்த்து வந்தார். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. பணி நிமித்தம் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். இதில் ஆசிரியருக்கும், ஆசிரியைக்கும் காதல் மலர்ந்தது. அவர்கள் பள்ளிக்கு வெளியே அடிக்கடி சந்தித்து கொண்டனர்.

ஆசிரியரும், ஆசிரியையும் காதலிக்கும் தகவல் அவர்களின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதில் ஆசிரியையின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காதலனை சந்திக்கவும் அனுமதி மறுத்தனர்.இதனால் மனமுடைந்த ஆசிரியை நேற்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அவர் நேராக காதலனை சந்தித்து அவரையும் அழைத்துக் கொண்டு தக்கலை போலீஸ் நிலையம் சென்றார்.

அங்கு போலீசாரிடம் நாங்கள் இருவரும் ஒருவரை யொருவர் காதலிக்கிறோம். இதை பெற்றோர் ஏற்க மறுக்கிறார்கள். எனவே எங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறினர்.

இதையடுத்து போலீசார் இருவரின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்களை போலீஸ் நிலையம் வரவழைத்து சமரச பேச்சு நடத்தினர். இதில் ஆசிரியரின் காதலை அவரது பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். ஆசிரியையின் காதலை ஏற்க அவரது பெற்றோர் மறுத்தனர். ஆனால் ஆசிரியை பெற்றோருடன் செல்ல மறுத்ததோடு, காதலருடன்தான் செல்வேன் என உறுதியாக கூறினார்.

இருவரும் மேஜர் என்பதால் போலீசார் காதல் ஜோடியின் முடிவை ஏற்று அவர்களை சேர்ந்து வாழ அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News