செய்திகள்

விடுதியில் ஆபாச நடனம் ஆடியதாக பெண் என்ஜினீயரை மிரட்டிய டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டருக்கு அபராதம்

Published On 2018-07-19 06:03 GMT   |   Update On 2018-07-19 06:03 GMT
கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதியில் ஆபாச நடனம் ஆடியதாக கூறி பெண் என்ஜினீயரிடம் லஞ்சம் கேட்ட மிரட்டிய டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:

சென்னை சாலி கிராமத்தைச் சேர்ந்தவர் நிவேதிதா. என்ஜினீயர். இவர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் எனது தோழிகளுடன் கடந்த 2014-ம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தேன். அங்குள்ள ஒரு லாட்ஜில் நாங்கள் தங்கி இருந்தோம்.

நள்ளிரவு 1 மணிக்கு லாட்ஜுக்கு வந்த அப்போதைய கொடைக்கானல் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார், இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் ஆபாச நடனம் ஆடியதாக கூறி எங்களை கொடைக்கானல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

விசாரணை என்ற பெயரில் அவதூறாக பேசி அத்துமீறி நடந்து கொண்டனர். பெண்களிடம் விசாரணை நடத்தும்போது பெண் போலீசார் உடன் இருக்க வேண்டும் என்று விதி உள்ளது.

ஆனால், அதுபோன்று பெண் போலீசார் யாரும் இல்லை. எங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்த போதும் அதை ஏற்க போலீசார் மறுத்து விட்டனர். ரூ.7 லட்சம் லஞ்சமாக கொடுத்தால் விடுவித்து விடுவதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர். நாங்கள் பணம் கொடுக்க மறுத்ததால் எங்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்தனர். எனவே, போலீஸ் அதிகாரிகள் மோகன்குமார், கருணாகரன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன், ‘சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது போலீஸ் அதிகாரிகள் மோகன்குமார், கருணாகரன் ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. இதற்காக அவர்கள் இருவருக்கும் சேர்த்து ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு ஒரு மாதத்தில் வழங்கி விட்டு போலீஸ் அதிகாரிகள் இருவரின் சம்பளத்தில் இருந்து தலா ரூ.1 லட்சம் பிடித்தம் செய்து கொள்ளலாம். மேலும், அவர்கள் இருவர் மீதும் கிரிமினல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். #tamilnews
Tags:    

Similar News