செய்திகள்

வேடசந்தூர் அருகே கள்ளக்காதலியை கொன்று விவசாயி தற்கொலை

Published On 2018-07-10 06:01 GMT   |   Update On 2018-08-10 04:40 GMT
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கள்ளக்காதலியை கொன்று விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காஜாநகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது65). விவசாய கூலி வேலை பார்த்து வந்தார். மேலும் தனது தோட்டத்தில் இருந்து தென்னை நார் மூலம் துடைப்பம் தயாரித்து சந்தைக்கு விற்பனைக்கு அனுப்புவார்.

இவருக்கு திருமணம் ஆகி பாப்பாத்தி என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மகன் மற்றும் மகள்களுக்கு திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

பொன்னுச்சாமிக்கும் வெள்ளையகவுண்டனூரை சேர்ந்த சங்கர் மனைவி ஈஸ்வரி (55) என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.

வயதான காலத்தில் ஏற்பட்ட இந்த உறவு குறித்து அக்கம் பக்கத்தில் ஏளனமாக பேசினர். இதனால் ஈஸ்வரியை அழைத்துக்கொண்டு பொன்னுச்சாமி தனியாக வீடு எடுத்து அவரை குடி வைத்தார். ஊரில் உள்ள பெரியவர்களும், குடும்பத்தினரும் சொல்லியும் கேட்காமல் இவர்களது தொடர்பு நீடித்து வந்தது. நேற்று இரவு ஈஸ்வரிக்கும் பொன்னுசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றிய நிலையில் பொன்னுச்சாமி ஈஸ்வரியை கல்லால் தாக்கி கொலை செய்தார். பின்னர் அவரது உடலை பார்த்து கதறி அழுத நிலையில் தன்னை போலீஸ் பிடித்து விடுமோ? என்ற அச்சத்தில் தனது வீட்டிற்கு வந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலையில் ஈஸ்வரி கொலை செய்யப்பட்ட நிலையிலும் பொன்னுச்சாமி தற்கொலை செய்த நிலையில் இருந்ததை பார்த்து உறவினர்கள் ஒன்று திரண்டனர்.

இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News