செய்திகள்
கையில் காயத்துடன் கீதா

மளிகை கடையில் புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் நகை கொள்ளை

Published On 2018-07-02 11:55 IST   |   Update On 2018-07-02 11:55:00 IST
ஈரோட்டில் இன்று அதிகாலை மளிகை கடையில் புகுந்து கத்தி முனையில் பெண்ணை வெளியே இழுத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:

ஈரோடு முத்தாம்பாளையம் ஹவுசிங் யூனிட்-1 பகுதி நல்லியம்பாளையம் ரோட்டில் மளிகை கடை வைத்திருப்பவர் ஜெயக்குமார். இவரது மனைவி கீதா (வயது 40).

இவர்களது வீடு கடையின் பின்புறம் உள்ளது. இன்று அதிகாலை ஜெயக்குமார் கடைக்கு சரக்குகளை வாங்க மார்க்கெட்டுக்கு சென்று விட்டார். இதனால் அதிகாலை 5 மணி அளவில் அவரது மனைவி கடையை திறக்க சென்றார்.

கடையை திறந்து பொருட்களை அடுக்கி வைத்து கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

மோட்டார் சைக்கிளை நிறுத்தி கீழே இறங்கிய 2 பேரும் மளிகை கடையில் பொருட்களை வாங்குவது போல் வந்தனர். அப்போது திடீரென 2 பேரும் கடைக்குள் புகுந்தனர். ஒருவன் கீதாவின் கழுத்தை பிடித்தான். இன்னொருவன் கத்தியை காட்டி மிரட்டி ‘‘கழுத்தில் உள்ள நகையை கழட்டி கொடு. இல்லை என்றால் குத்தி விடுவேன்’’ என்று மிரட்டினான்.

ஆனால் கீதா நகையை கழற்ற விடாமல் இறுக பிடித்து கொண்டார். ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் அவரை தர...தரவென வெளியே இழுத்து வந்தனர். அந்த சமயத்தில் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இது கொள்ளையர்களுக்கு வசதியாகி விட்டது. கீதா கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டனர்.

கொள்ளையர்களிடம் கடைசி வரை போராடியும் கீதாவால் நகையை காப்பாற்ற முடியவில்லை. நகையை இறுக்கி பிடித்து போராடிய அவரை கொள்ளையர்கள் இழுத்து வந்ததால் அவரது கையிலும், கழுத்திலும் ரத்தக்காயம் ஏற்பட்டது.

ஈரோட்டில் அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அந்த பகுதி மக்களிடம் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த துணிகர சம்பவம் குறித்து தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். #Tamilnews

Tags:    

Similar News