குடும்ப தகராறில் தம்பியை ஓட ஓட விரட்டி குத்திக்கொன்ற அண்ணன்
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாயக்கர்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் வெள்ளைச்சாமி, கணேசன் (வயது38). அண்ணன்-தம்பிகளான இவர்கள் அறந்தாங்கியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கிடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று காலை இருவரும் ஓட்டலுக்கு வேலைக்கு சென்றனர். அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உண்டானது. இதில் ஆத்திரமடைந்த வெள்ளைச்சாமி கத்தியால் கணேசனை குத்த முயன்றார். இதையடுத்து கணேசன் அங்கிருந்து தப்பியோடினார்.
இருப்பினும் வெள்ளைச்சாமி, கணேசனை துரத்தி சென்று சரமாரியாக கத்தியால் குத்திக்கொன்றார். நடுரோட்டில் ஓட ஓட விரட்டி தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓடினர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெள்ளைச்சாமியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.