தருமபுரி மாவட்டத்தில் பசுமை வழிச்சாலைக்காக நிலம் அளவிடும் பணி முடிந்தது
தருமபுரி:
சென்னை- சேலம் இடையே 8 வழி பசுமை சாலை ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகியமாவட்டங்களில் நிலங்களை அளவிட்டு கற்களை நடும் பணி நடந்து வந்தது.
தருமபுரி மாவட்டத்தில் 54.8 கிலோ மீட்டர்தூரத்திற்கு நிலங்களை அளவிடும்பணி நடந்தது. தருமபுரி மாவட்டம் அரூர் அருகே இருளப்பட்டியில் தொடங்கி கோபி நாதம்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, முக்கா ரெட்டிப்பட்டி, சாமியாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி, சின்னமஞ்சவாடி, கோம்பூர், பெரியமஞ்சவாடி ஆகிய பகுதிகளில் இந்த பணி கடந்த 11 நாட்களாக நடந்து வந்தது.
விவசாயிகள் தீக்குளிக்கப் போவதாக மிரட்டியதால் பதட்டம் ஏற்பட்டது. 100-க்கும் மேற்பட்ட போலீசாருடன் சென்று நிலத்தை அளந்தாலும் விவசாயிகளிடம் பேச்சு வார்த்த நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளை சம்மதிக்க வைத்தனர்.
நில அளவிடும் பணி நேற்று மாலையுடன் முடிந்தது. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 957 ஏக்கர் நிலத்தில் நிலம் அளவிடும் பணி முடிந்துள்ளது.இனி அடுத்தக்கட்டமான சர்வே எண்களை வைத்து சரி பார்ப்பார்கள்.
அதன்பிறகு பொதுமக்களிடம் கருத்து கேட்டு திட்டப்பணிகள் தொடங்கும். #GreenWayRoad