செய்திகள்

டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்- ரெயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை

Published On 2018-06-21 08:10 GMT   |   Update On 2018-06-21 08:10 GMT
டிக்கெட் எடுக்காமல் ரெயிலில் பயணம் செய்த பயணிகள் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் சிக்கினர்.அவர்களுக்கு ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நாகமலை புதுக்கோட்டை:

பாதுகாப்பான நீண்ட தூர பயணத்திற்கு பொதுமக்கள் பெரிதும் விரும்புவது ரெயில் பயணத்தைத் தான்.அதிலும் தற்போது பஸ் கட்டணம் அதிகரித்ததில் இருந்து ரெயில்களில் தான் பலரும் பயணம் செய்கின்றனர்.

இதனால் ரெயில்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக முன்பதிவு அல்லாத ரெயில் பெட்டிகளில் இருக்கை வசதி இல்லாமல் பலரும் நின்று கொண்டே செல்கின்றனர். இதில் சிலர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணச்சீட்டு எடுக்காமல் பயணிப்பதாக ரெயில்வே துறையினருக்கு புகார்கள் வந்தன.

இதனையடுத்து ரெயில்வே பறக்கும் படை பரிசோதகர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட பயணிகள் ரெயிலில், தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட வர்த்தக ஆய்வாளர் கார்த்திக் ராஜா தலைமையில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

அப்போது கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்டோர் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மதுரை ரெயில் நிலையம் வந்ததும், ரெயில்வே பாதுகாப்பு படையினர் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.

ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் விசாரணை நடத்தி, டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த பயணிகளிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூல் செய்தார். #tamilnews
Tags:    

Similar News