செய்திகள்

விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுப்பு - பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

Published On 2018-06-09 06:15 GMT   |   Update On 2018-06-09 06:15 GMT
திருவாரூரில் 12-ந்தேதி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரித்துள்ளார். #Farmersstrike #PRPandian

மன்னார்குடி:

காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் வருகிற 12-ந்தேதி திருவாரூர் ரெயில் நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் உண்ணாவிரதம் போராட்டத்துக்கு அனுமதி கோரி கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) நடராஜன் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகளின் சார்பில் உண்ணாவிரதம் நடத்த முறைப்படி அனுமதி கோரி கடிதம் கொடுத்தும், போலீசார் அனுமதிக்க கொடுக்க மறுத்துவிட்டனர். இது மிகவும் கண்டனத்துக்குரியது. விவசாயிகளின் குரல் வளையை நெரிக்கும் செயலாகும். எனவே நாங்கள் உண்ணாவிரதம் நடத்த அனுமதி கோரி வருகிற 11-ந்தேதி ஐகோர்டில் வழக்கு தொடருவோம். அதன்பின் ஐகோர்ட் அனுமதி அளிக்கும் தேதியில் நாங்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

இது தொடர்பாக மற்ற விவசாய சங்க நிர்வாகிகளையும் கலந்தாலோசித்து தொடர் போராட்டங்கள் நடத்த தீர்மானித்துள்ளோம். உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த தமிழக அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம். இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் தமிழக விவசாயிகள் நிலை பெரும் கேள்விக்குறிதாக மாறிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார். Farmersstrike #PRPandian

Tags:    

Similar News