போளூர் அருகே கார்-ஆட்டோ மோதல்: சிறுமி உள்பட 2 பேர் பலி
போளூர்:
வேலூர் பாகாயத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர், காரில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்று விட்டு நேற்றிரவு ஊர் திரும்பினர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே எட்டிவாடி கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே இன்று காலை 6 மணியளவில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, குடியாத்தம் சந்தப்பேட்டையில் இருந்து வந்த லோடு ஆட்டோவும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் காரும், ஆட்டோவும் நசுங்கி உருகுலைந்தது.
இந்த கோர விபத்தில் காரில் இருந்த வைஷ்ணவி (வயது 13) என்ற சிறுமி மற்றும் ஆட்டோவில் இருந்த ரவி (52) ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் காரில் இருந்த வெங்கடேசன், லட்சுமி, ராஜ் குமார், நவீன், அனு, துளசி, கருணாஸ், பரத், சீனு, அருண் மற்றும் ஆட்டோ டிரைவர் என 11 பேர் படுகாயமடைந்தனர்.
களம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த 11 பேரும் போளூர் மற்றும் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews