செய்திகள்
ஓட்டல் மேற்கூரை ஷெட் இடிந்து கிடக்கும் காட்சி.

அவினாசியில் ஓட்டல் மேற்கூரை இடிந்து 2 இளம்பெண்கள் பலி

Published On 2018-05-14 04:26 GMT   |   Update On 2018-05-14 04:26 GMT
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே ஓட்டல் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மேலும் ஒரு பெண் பலியானார்.
அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள நியூ திருப்பூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் உள்ளது.

இந்த நிறுவனத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சரஸ்வதி (22), சுனிதா (24) விழுப்புரம் மாவட்டம் டி. குன்னத்தூரை சேர்ந்த ரம்யா (19), உளுந்தூர்பேட்டை பிரியா ஆகிய 4 பேரும் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 4 பேரும் அவினாசி வந்தனர். அங்கு கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள்.

பின்னர் அவினாசி பத்திரப்பதிவு அலுவலகம் எதிரில் உள்ள அமிர்தம் ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அந்த ஓட்டலின் முகப்பு பகுதி மேற்கூரை இரும்பு ஷெட்டால் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த மேற்கூரையின் கீழ் சரஸ்வதி, சுனிதா, ரம்யா, பிரியா ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஓட்டலின் மேற்கூரை ஷெட் மொத்தமாக இடிந்து விழுந்தது.

இதில் 4 பேரும் சிக்கி கொண்டனர். அவர்கள் அலறினார்கள். சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து மேற்கூரை ஷெட்டை தூக்கி காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் முடியவில்லை. இதனை தொடர்ந்து அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து மேற்கூரையை அப்புறப்படுத்தினார்கள்.

ஆனால் சரஸ்வதி இடிபாடுகளுக்குள் சிக்கி பலியாகி இருந்தது தெரிய வந்தது. அவரது உடலை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலத்த காயம் அடைந்த சுனிதா, ரம்யா, பிரியா ஆகியோர் மீட்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி இளம்பெண் ரம்யா இரவு பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

பல்லடத்தில் நேற்று முன்தினம் இரவு பஸ்நிலைய கழிவறை ஷெட் இடிந்து கொத்தனார் பலியான சம்பவம் நடைபெற்றது. தற்போது மேலும் 2 பெண்கள் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
Tags:    

Similar News