செய்திகள்

கர்நாடகாவில் நாளை தேர்தல்: தமிழக எல்லையில் பலத்த பாதுகாப்பு

Published On 2018-05-11 11:15 IST   |   Update On 2018-05-11 11:16:00 IST
கர்நாடகாவில் நாளை நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு தமிழக எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக 9 இடங்களில் தற்காலிகமாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. #Karnatakaassemblyelection

தாளவாடி:

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. தேர்தல் பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்த நிலையில் வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தலையொட்டி கர்நாடக- தமிழகம் எல்லையிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட தமிழக- கர்நாடக மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தம் தடுத்து நிறுத்தப்பட்டு வாக்காளர்களுக்கு பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இரு மாநில வனப்பகுதி எல்லைகளாகும் பாரகுண்டி, ராமபுரம், எல்லக்கட்டை, பந்தனஹள்ளி, அருள்வாடி, பைனாபுரம், கேர்மாளம், ஜல்லிபாளையம், ஆசனூர் ஆகிய 9 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு நுழையும் அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனைசாவடிகளில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News