செய்திகள்

காவிரி நீர் பிரச்சனை- நீட் தேர்வில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது: வைகோ

Published On 2018-05-07 17:03 IST   |   Update On 2018-05-07 17:03:00 IST
காவிரி நீர் பிரச்சனை மற்றும் நீட் தேர்வில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று சிதம்பரம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். #CauveryIssue #NEETEXam #MDMK #Vaiko
சிதம்பரம்:

சிதம்பரத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வு என்பது தமிழகத்தில் சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் ஒரு அநீதியாகும். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு வழங்கிய மசோதாவை மத்திய அரசு குப்பையில் போட்டு விட்டது. அதற்கு எந்தவித போராட்டத்தை நடத்தினார்கள்? எந்த விதத்தில் அழுத்தம் கொடுத்தார்கள்?.

வேறு மாநிலத்தில் நீட் தேர்வு என்றவுடனே கொதித்தெழுந்து அதை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டாமா? தமிழகத்தில் இல்லாத பள்ளிகளா ராஜஸ்தானிலும், கேரளாவிலும் இருக்கிறது.

தமிழர்கள் என்ன சர்வதேச அகதிகளா? தங்க இடம் இல்லாமில்லாமல் உணவில்லாமல் ஒருவிதமான மன அழுத்தத்திலே தேர்வு எழுதி உள்ளார்கள் மாணவர்கள் அதில் எப்படி வெற்றி பெற முடியும்?.

மாணவனின் தந்தை இறந்த செய்தி முதலில் கேள்விபட்டதும் நான் கேரள கவர்னர் சதாசிவம் மற்றும் அந்த மாவட்ட கலெக்டரிடம் பேசினேன். 3 லட்சம் பணம் தருகிறோம் வேலை தருகிறோம் என்றால் இறந்த உயிர் வந்து விடுமா?

தமிழகத்தின் வாழ்வாதாரத்திற்கும், ஒட்டு மொத்த நலன்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடிய சூழல் தற்போது உள்ளது. மத்திய அரசு காவிரி நீர் மற்றும் நீட் தேர்வு விவகாரங்களில் தமிழகத்தை வஞ்சிக்கிறது.

நியூட்ரினோ, ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட அனைத்திலும் தமிழகத்திற்கு வஞ்சகம் செய்கிறது. இவற்றை எல்லாம் எதிர்த்து போராட வேண்டிய சூழல் உள்ளது.

மதவாத சக்திகளின் பிரவேசத்தையும் தடுக்க வேண்டும், திராவிட இயக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தி.மு.க.வோடு கரம் கோர்த்திருக்கிறோம். இரு தரப்பிலும் நல்ல புரிதல் உள்ளது. நேச உணர்வோடு இது தொடர்கிறது.

இவ்வாறு வைகோ கூறினார்.

கடலூரில் நிருபர்களுக்கு வைகோ பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

‘நீட்’ தேர்வு சமூகநீதியை அழிக்க கூடிய பெரும் கேடு. நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் இந்தியில் வந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பன்முக தன்மையை சிதைக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. சமூக நீதிக்கு வேட்டு வைக்க நீட் தேர்வை கொண்டு வந்தார்கள்.

தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் வகையில் மாணவ-மாணவிகளை வெளிமாநிலத்துக்கு சென்று தேர்வு எழுத வைத்தார்கள். சோதனை என்ற பெயரில் மிகவும் கேவலமாக நடந்து கொண்டார்கள். இப்போது கேள்வித்தாள் தமிழில் வரவில்லை என்பது மன்னிக்க முடியாத அநீதியாகும்.

காவிரி மேலாண்மை வாரியம், ‘நீட்’ தேர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை மக்கள் மன்றத்தில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மத்திய அரசு தொடர்ந்து தவறுக்கு மேல் தவறு செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். #CauveryIssue #NEETEXam #MDMK #Vaiko

Similar News