செய்திகள்
விடுதலை செய்யப்பட்ட வீரப்பன் கூட்டாளிகள் ராஜேந்திரன், ஜவகர், சண்முகம் ஆகியோரை படத்தில் காணலாம்

யானை தந்தம்-நாட்டு துப்பாக்கியை விற்க முயன்ற வழக்கில்- வீரப்பன் கூட்டாளிகள் 3 பேர் விடுதலை

Published On 2018-04-25 05:36 GMT   |   Update On 2018-04-25 05:36 GMT
யானை தந்தம்-நாட்டு துப்பாக்கியை விற்க முயன்ற வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் 3 பேரை விடுதலை செய்து சத்தியமங்கலம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உள்பட்ட கெம்பநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் கடந்த 27-1-2000 அன்று ஒரு மூட்டையை சுமந்தபடி வந்த 6 பேரை அதிரடிப்படையினர் சுற்றி வளைத்து பிடித்தார்கள். அந்த மூட்டையில் 12 யானை தந்தங்களும், ஒரு நாட்டு துப்பாக்கியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர்கள் சத்தியமங்கலம் அருகே உள்ள கொளத்தூரை சேர்ந்த சண்முகம், ஜவகர், ராஜேந்திரன், கோவிந்தராஜன், ஆறுமுகம், சந்திரகவுடா ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் வீரப்பன் கூட்டாளிகளான அவர்கள், வீரப்பன் உத்தரவுப்படி யானை தந்தங்களையும், நாட்டு துப்பாக்கியையும் கேரளாவுக்கு விற்க கொண்டு சென்றதும் தெரிந்தது.

இதையடுத்து இவர்கள் 6 பேரையும் சத்தியமங்கலம் வனத்துறையினரிடம் அதிரடிப்படையினர் ஒப்படைத்தார்கள். இதுகுறித்து வனத்துறையினர் வீரப்பன் உள்பட 7 பேர் மீது சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இதில் வீரப்பன் சிக்கவில்லை. கோவிந்தராஜனும், ஆறுமுகமும் ஜாமீனில் வெளியே வந்தார்கள்.

ஆனால் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே கோவிந்தராஜன், வீரப்பன், சந்திரகவுடா ஆகியோர் இறந்துவிட்டனர். இதனால் அவர்களுக்கு வழக்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆறுமுகம் தலைமறைவானார். அவரை வனத்துறையினர் தேடி வருகிறார்கள். மற்ற 3 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கு சம்பந்தமாக வனத்துறையினர் சரியான சாட்சிகளை சமர்ப்பிக்கவில்லை. எனவே சண்முகம், ஜவகர், ராஜேந்திரன் ஆகிய 3 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி குமரசிவம் உத்தரவிட்டார். #tamilnews #
Tags:    

Similar News