செய்திகள்

மதுராந்தகம் அருகே லாரிகள் மோதல்: 3 பேர் பலி

Published On 2018-04-12 14:03 IST   |   Update On 2018-04-12 14:03:00 IST
மதுராந்தகத்தை அடுத்த செங்குந்தர்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த மினி லாரி மீது மோதிய விபத்தில் 3 பேர் பலியாயினர்.
மதுராந்தகம்:

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சரக்கு ஏற்றிய லாரி இன்று அதிகாலை மதுராந்தகம் அருகே வந்து கொண்டு இருந்தது. டிரைவர் நீலமேகம் லாரியை ஓட்டினார்.

மதுராந்தகத்தை அடுத்த செங்குந்தர்பேட்டை அருகே லாரி வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

சாலையின் தடுப்புச்சுவரை தாண்டி எதிர்புறம் வந்த மினி லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் மினி லாரியில் இருந்த டிரைவர் ஏழுமலை (37) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மேலும் அதில் வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மீத்து (25), விஜய் (22) மற்றும் 2 பேர், லாரி டிரைவர் நீலமேகம் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மீத்து, விஜய் ஆகியோர் இறந்தனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்தில் பலியான பீகார் வாலிபர்கள் மதுராந்தகம் அருகே உள்ள ரைஸ்மில்லில் வேலை பார்த்து வந்தனர். இன்று அதிகாலை நெல் மூட்டைகள் ஏற்றுவதற்காக மேல்மருவத்தூர் நோக்கி மினி லாரியில் சென்ற போது விபத்தில் சிக்கி பலியாகி விட்டனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து மராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Similar News