செய்திகள்

உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தில் 50 சதவீதத்தை குறைக்க வேண்டும்: ஜி.கே.வாசன் பேட்டி

Published On 2018-01-29 21:11 IST   |   Update On 2018-01-29 23:17:00 IST
தமிழக அரசு உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தில் 50 சதவீதத்தை குறைக்க வேண்டும் என புதுக்கோட்டையில் ஜி.கே.வாசன் கூறினார்.
புதுக்கோட்டை:

அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து, தற்போது தமிழக அரசு பஸ் கட்டணத்தை குறைத்துள்ளது மக்களை ஏமாற்றும் செயல். ஏனெனில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தில் 50 சதவீதத்தையாவது குறைக்க வேண்டும். தமிழகத்தில் வார்டு மறுசீரமைப்பு செய்வதில் பல குளறுபடிகள் உள்ளது. எனவே முறையாக வார்டு மறுசீரமைப்பு செய்த பின்னர் தான் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். இதையும் மீறி உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முயற்சித்தால் பலர் நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலை ஏற்படும்.

ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்னரும், இந்த விவகாரம் இருதரப்பிலும் தொடர்ந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும். இலங்கை அரசு மீன்பிடி தடை சட்டத்தை கொண்டு வந்து உள்ளது கண்டிக்கத்தக்கது.

இதனால் தமிழக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய, மாநில அரசுகள், இலங்கை அரசை கண்டித்து இந்த சட்டத்தை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். கமல், ரஜினி இருவரும் தங்களது அரசியல் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை தெரிவித்த பின்னர் தான், த.மா.கா. அவர்களை பற்றி விமர்சனம் செய்யும். மக்கள் நலனை பிரதிபலிக்கும் அரசாக மத்திய, மாநில அரசுகள் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #gkvasan

Similar News