செய்திகள்

கணக்கெடுப்பு பணி தொடக்கம்: களக்காடு வனப்பகுதியில் புலிகள் கால்தடங்கள் பதிவு

Published On 2018-01-29 10:19 GMT   |   Update On 2018-01-29 10:19 GMT
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் களக்காடு வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.
களக்காடு:

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள புலிகள் காப்பக வனப்பகுதியில் தேசிய புலிகள் ஆணையம் சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகளை மட்டும் கணக்கெடுப்பது வழக்கம்.

இதுபோல கடந்த 2014-ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்தது. அதன் பின்னர் 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கணக்கெடுப்பு பணிகள் நேற்று (28-ந் தேதி) தொடங்கின. களக்காடு, திருக்குறுங்குடி, மேல்கோதையாறு வனசரங்களில் 13 பீட்களில் 21 குழுவினர் என மொத்தம் 147 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு குழுவில் வனத்துறை ஊழியர், தன்னார்வலர், கல்லூரி மாணவர்கள் உள்ளனர். இந்தாண்டு நவீன முறையில் செல்போன் ஆப் மூலம் கணக்கெடுப்பு நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் இளங்கோ கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி வைத்தார். வனசரகர் புகழேந்தி தலைமையில் கணக்கெடுப்பு குழுவினர் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

நேற்று திருக்குறுங்குடி பீட் கொடுமுடியாறு அணை பகுதி, செங்கல்தேரி வனப்பகுதியில் புலி கால்தடங்களும், வடகரை பீட், தலையணை பீட் பகுதியில் சிறுத்தைகளின் கால்தடங்களும் பதிவு செய்யப்பட்டது. வருகிற 3-ந் தேதி வரை இப்பணி தொடர்ந்து நடைபெறும்.

இதில் சேகரிக்கப்படும் வனவிலங்குகளின் கால்தடங்கள், எச்சங்கள் டோராடூன் வன ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுபப்பட்டு, மரபனு சோதனை நடத்தப்படும் அதன் பின்னர் புலிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படும். இதனைத் தொடர்ந்து தலையணை, திருக்குறுங்குடி நம்பிகோவில் உள்ளிட்ட சுற்றுலா பகுதிக்கு செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News