செய்திகள்

பண்ருட்டி அருகே கள்ளக்காதல் பிரச்சினையில் ஆசிரியர் அடித்துக்கொலை

Published On 2018-01-13 15:23 IST   |   Update On 2018-01-13 15:23:00 IST
கள்ளக்காதல் பிரச்சினையில் ஆசிரியர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் நெய்வேலி 10- வது வட்டம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

கடந்த 9-ந் தேதி இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து சதீஷ் குமாரின் தந்தை ஏழுமலை நெய்வேலி டவுன் ஷிப் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர்.

விசாரணையில் சதீஷ்குமாருக்கும், அதே பள்ளியில் வேலைப் பார்க்கும் பண்ருட்டியை அடுத்த கீழக்குப்பத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கும் இடையே கள்ளகாதல் இருந்து வந்தது தெரிந்தது. போலீசார் ஆசிரியையின் கணவர் ஞானப்பிரகாசிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது ஞானப் பிரகாசம் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை போலீசாரிடம் கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று நடத்திய விசாரணையில் ஞானப்பிரகாசம் தனது மனைவியுடனான கள்ளத்தொடர்பை விட்டு விடும்படி பலமுறை சதீஷ்குமாரிடம் கூறினேன். ஆனால், அவர் கேட்கவில்லை. இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.

அதன்படி தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து சதீஷ்குமாரை அடித்துக்கொலை செய்து உடலை பண்ருட்டி அருகே உள்ள செம்மேடு ஏரிப்பாளையத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் புதைத்து வைத்திருப்பதாக கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஞானபிரகாசம் கொடுத்த தகவலின் பேரில் அவரது நண்பர்கள் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காடாம்புலியூர் போலீசாருக்கு நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வடிவேல், காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் குமாரய்யா, சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் ஆகியோர் சதீஷ்குமாரின் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்றனர்.

இது குறித்து பண்ருட்டி தாசில்தார் விஜய் ஆனந்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் பிணம் புதைக்கப்பட்ட இடத்துக்கு விரைந்துள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

Similar News