தடயவியல் நிபுணராக வரும் பாவனா தனது தம்பியுடன் வசித்து வருகிறார். இவரது தந்தையும், தாயும் இறந்த பிறகு, தனது தம்பி மனநலம் பாதிக்கப்படுகிறார். பல முறை அவர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். இப்படி இருக்கையில் தம்பி ஒருநாள் காணாமல் போய்விடுகிறார்.
தம்பியை தேடிக் கொண்டிருக்கும்போது, அவர் தனது தாய், தந்தை இறந்த இடத்திலேயே தம்பியும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியாகிறார்.
தொடர் கொலைகளை விசாரிக்கும் காவல் அதிகாரி ரஹ்மான் பாவனாவின் தம்பி மரணம் குறித்து விசாரிக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்ட அவர், தற்கொலை செய்துக்கொண்டதாக வழக்கை முடித்து வைக்கிறார்.
தன் தம்பியின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக நம்பும் தடயவியல் நிபுணர் பாவனா, உண்மையை கண்டறிய களமிறங்குகிறார். அப்போது, ரஹ்மானுடன் பாவனாவின் பயணம் இணைகிறது.
ஒரு கட்டத்தில் தற்கொலைக்கும், இந்த மர்மக் கொலைகளுக்கும் இடையே உள்ள 'அறிவியல் பின்னணி' மற்றும் 'மரணத்தின் சமன்பாடு' (Equation of Death) என்ன என்பதை விவரிக்கிறது படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நீண்ட இடைவேளைக்குப் பிறகு மலையாளத்தில் ஒரு அழுத்தமான பாத்திரத்தில் பாவனா மிரட்டியிருக்கிறார். ஒரு அக்காவாக பாசம் காட்டுவதும், விசாரணையில் உறுதி காட்டுவதுமாக பாவனா, கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். ரஹ்மானின் அனுபவ நடிப்பு திரையில் பிரதிபலிக்கிறது.
இயக்கம்
மலையாள சினிமாவில் 'சைக்கோ த்ரில்லர்' கதையுடன் 'அறிவியல் புனைவை' (Sci-Fi) இணைத்த விதம் ஒரு புதிய முயற்சியை எடுத்திருக்கிறார் இயக்குனர் ரியாஸ் மரத். ஒரு தரமான சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம்.
152 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தின் இரண்டாம் பாதி சற்று இழுவையாகத் தெரிகிறது. எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஒளிப்பதிவு & இசை
சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு மற்றும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் பின்னணி இசை படத்திற்கு ஒரு 'ஹாலிவுட் த்ரில்லர்' தரத்தைக் கொடுக்கிறது.
ரேட்டிங்- 2.5/5