'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் உரிமையை வாங்கிய பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்
- இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.
- ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் வருகிற 12-ந்தேதி முதல் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.
நடிகர் ஜீவாவின் 45 ஆவது படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' உருவானது. இப்படத்தை 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கி இருந்தார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.
தம்பி ராமையா, இளவரசு, பிராதனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த மாதம் 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வசூல் குவித்தது. பொங்கலையொட்டி வெளியான, சிவகார்த்திகேயனின் 'பராசக்தி', கார்த்தியின் 'வா வாத்தியார்' படங்களை பின்னுக்குத் தள்ளி ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், அரசியல் கலந்த நகைச்சுவை படமான 'தலைவர் தம்பி தலைமையில்' படம் வருகிற 12-ந்தேதி முதல் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.
இதனிடையே, 'தலைவர் தம்பி தலைமையில்' படம் இந்தியில் வெளியாக உள்ளதாகவும் படத்தின் உரிமைகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் உரிமையை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளன.
கோவையில் நடைபெற்ற கிரிக்கெட் லீக் போட்டியை காண வந்த போனி கபூர் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தை பார்த்ததாகவும் படம் பிடித்து போக அதனை இந்தியில் ரீமேக் செய்ய விரும்பியதால் படத்தின் உரிமையை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.