செய்திகள்

பலத்த மழையால் மதுராந்தகம் ஏரி மீண்டும் நிரம்பியது

Published On 2017-12-02 12:01 IST   |   Update On 2017-12-02 12:01:00 IST
சென்னையில் பெய்த கன மழையால் மதுராந்தகம் ஏரி மீண்டும் தனது முழு கொள்ளளவான 23.3 அடியை இன்று காலை எட்டியது.
மதுராந்தகம்:

காஞ்சீபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்று மதுராந்தகம் ஏரி ஆகும்.

சமீபத்தில் பெய்த வட கிழக்கு பருவமழையால் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. கடந்த சில நாட்களாக மழை பெய்யாததால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது.

இந்த நிலையில் ‘ஒகி’ புயலால் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்தது. கிளியாற்றில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அந்த நீர் அதிக அளவு மதுராந்தகம் ஏரிக்கு வந்தது.

மேலும் உத்திரமேரூர் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரும் மதுராந்தகம் ஏரிக்கு வந்தது. இதையடுத்து ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

இதனால் மதுராந்தகம் ஏரி மீண்டும் தனது முழு கொள்ளளவான 23.3 அடியை இன்று காலை எட்டியது. ஏரிக்கு 9 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து 8 ஆயிரத்து 950 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இன்று மதியத்துக்கு பிறகு உத்திரமேரூர் ஏரி திறக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும். அதன்பிறகு ஏரியின் முக்கிய 2 பெரிய மதகுகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து ஏரியில் இருந்து சுமார் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படும். வெள்ளப்பெருக்கு காரணமாக ஏரி கரையோரம் உள்ள 15 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Similar News