செய்திகள்

மணல் குவாரிகளை திறக்க மேல்முறையீடு செய்யக்கூடாது: ஈஸ்வரன்

Published On 2017-11-30 10:25 IST   |   Update On 2017-11-30 10:25:00 IST
மணல் குவாரிகளை திறக்க அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளை மூடவும், மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கு அனுமதி வழங்கியும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருப்பது வரவேற்புக்குரியது. இந்த உத்தரவால் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட்டு விவசாயம் புத்துயிர் பெறும் சூழல் உருவாகி இருக்கிறது.

மணல் குவாரிகள் மூடப்பட்டால் மட்டுமே தமிழகத்தில் விவசாய உற்பத்தியை அதிகரிக்க முடியும். தமிழகத்தில் பல ஆண்டுகளாக ஆற்றுப் படுகைகளிலிருந்து எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் மணல் எடுத்து இயற்கை வளங்களை சுரண்டி விவசாயத்தை அழித்து வந்த நிலையில், இன்றைய தினம் புதிய மணல் குவாரிகளை திறப்பதற்கு தடை உத்தரவையும், ஏற்கனவே செயல்பட்டு வந்த மணல் குவாரிகளை 6 மாதத்திற்குள் மூட வேண்டுமென்ற உத்தரவையும் உயர்நீதிமன்றம் பிறப்பித்திருப்பது தமிழக மக்களிடத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.

நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் தமிழக அரசும், தமிழக முதல்வரும் மவுனமாக இருக்காமல் அனுமதியின்றி நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணல் குவாரிகளை திறக்க மேல்முறையீடு செய்து விடக்கூடாது. தமிழக அரசு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மணல் குவாரிகள் நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். மணல் தட்டுப்பாட்டால் கட்டுமான பணிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் இருக்க தமிழக அரசின் சார்பில் மலேசிய மணலை இறக்குமதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மலேசிய மணலை இறக்குமதி செய்து விற்பனை செய்ய முன் வருபவர்களையும் தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Similar News