செய்திகள்

மழை தண்ணீரை சேமிக்க அரசு நடவடிக்கை இல்லை: தா.பாண்டியன் குற்றச்சாட்டு

Published On 2017-11-25 13:44 IST   |   Update On 2017-11-25 13:44:00 IST
2 ஆண்டுகளுக்கு சேமிக்க வேண்டிய தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. தமிழக அரசு மழைநீரை சேமிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தா.பாண்டியன் குற்றம் சாட்டினார்.
மதுரை:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் 19 மாவட்டங்களில் மழை இல்லை. குளம், கண்மாய், ஏரிகள் வறண்டு கிடக்கின்றன.

கடலோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை நன்கு பெய்தும் தண்ணீரை சேமிக்க தமிழக அரசு எதுவும் செய்யவில்லை. சென்னையில் 4 ஏரிகளில் 35 முதல் 40 சதவீதம் வரையே தண்ணீர் உள்ளது.

2 ஆண்டுகளுக்கு சேர்த்து வைக்க வேண்டிய தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளதாக நீரியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.



முல்லை பெரியாறு அணையில் நீர் பெருகாததால் வைகை பாசன விவசாயிகள் தண்ணீர் திறக்கக்கோரி போராடி வருகின்றனர். இந்தியாவிலேயே கடலை தொடாத ஒரே நதி வைகை மட்டுமே.

கோதாவரி அணையில் இருந்து இரும்பு குழாய் வழியாக காவிரிக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை சமீபத்தில் சென்னையில் மத்திய மந்திரி நிதின்கட்கரி அறிவித்தார். இது வரவேற்கத்தக்கது.

இதன் மூலம் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். கோதாவரி ஆற்றில் இருந்து 50 சதவீத தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது.

மத்திய அரசுடன் உள்ள இணக்கத்தை பயன்படுத்தி தமிழக அரசு கோதாவரி ஆற்றுநீரை காவிரிக்கு கொண்டுவரவேண்டும். இந்த திட்டத்திற்கு தமிழக அரசு உயிர் கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் 6 இடங்களில் மணல் குவாரிகள் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு தவறான நடவடிக்கை ஆகும். ஏற்கனவே நில வளம், நீர் வளம் சுரண்டப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் ஒரு கைப்பிடிகூட மணல் இல்லை.

எனவே புதிதாக மணல் குவாரிகளை திறக்கக்கூடாது. இதனை மீறி திறந்தால் இந்திய கம்யூனிஸ்டு பொதுமக்களோடு ஒருங்கிணைந்து போராடும்.

ஏற்கனவே திறக்கப்பட்ட மணல் குவாரிகளை மூட அரசு முயற்சிக்க வேண்டும். இதற்கு பதிலாக வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்ய வேண்டும்.

கிரானைட் முறைகேடு குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தாக்கல் செய்த அறிக்கையில் மதிப்பீட்டு அளவு குறைகள் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரிதான். மதிப்பீட்டாளர் அல்ல. கிரானைட் விவகாரத்தில் தவறு நடந்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு போட்டியிடுவது குறித்து கட்சியின் தலைமைக்குழு முடிவு எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News