செய்திகள்

விருத்தாசலம் அருகே ராஜவாய்க்காலில் வெள்ளப்பெருக்கு: 500 ஏக்கர் நெல் பயிர்கள் மூழ்கின

Published On 2017-10-11 17:57 IST   |   Update On 2017-10-11 17:57:00 IST
ராஜவாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 500 ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மே.மாத்தூர் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக் கட்டில் இருந்து பாசன வாய்க்கால்கள் மூலம் விவசாய நிலத்துக்கு தண்ணீர் செல்கிறது.

இந்த நிலையில் கோமுகி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட தால் மணிமுக்தாற்றில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இளங்கியனூர், நல்லூர் தரைப்பாலம், பரவலூர் தரைப்பாலம் ஆகியன வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

அண்ணாநகர், கலரங்குப்பம், எருக் கன்குப்பம், இருளர் தெரு, சேனக்குப்பம் உள்பட 30 கிராமங்கள் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில் மே.மாத்தூர் அணைக் கட்டுக்கு வந்த தண்ணீர் ராஜவாய்க்காலில் நேற்று மாலை பாசனத்துக்காக திறந்து விடப்பட்டது.

இந்த ராஜவாய்க்கால் தூர்வாரப்படாததால் அந்த பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

இந்த வெள்ளத்தால் சுமார் 500 ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. நெல் பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி விட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Similar News