ஜெயலலிதா இறப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: வேல்முருகன் பேட்டி
கடலூர்:
தமிழக வாழ்வுரிமை கட்சி கடலூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் இன்று கடலூர் டவுன் ஹாலில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இறந்தது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் முழு உண்மைகள் வெளிவராது. முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் தினமும் ஜெயலலிதா இறப்பு குறித்து வெவ்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
தமிழக அரசும், மத்திய அரசும் முழு விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மைகளை தெரிவிக்க வேண்டும். மேலும் ஜெயலலிதா இறப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
நீட் தேர்வு உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்திய அரசு காலில் தமிழக அரசு விழுகிறது. எனவே தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் முன்வந்து பதவி விலக வேண்டும்.
தமிழக கவர்னர் சட்ட மன்றத்தில் அ.தி.மு.க. அரசுக்கு மெஜாரிட்டி உள்ளதா? என்பதை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.