செய்திகள்
டெங்கு காய்ச்சலுக்கு பலியான அங்கம்மாள்

கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலி

Published On 2017-09-28 14:43 IST   |   Update On 2017-09-28 14:43:00 IST
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலியானார். 2 பேருக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, உறையூர், ஸ்ரீமுஷ்ணம், கானூர், விருத்தாசலம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கானூர் கிராமத்தைச் சேர்ந்த சுபா (வயது 28) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலியாகி உள்ளார். விருத்தாசலம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் ஏழுமலை. வியாபாரி. இவரது மனைவி அங்கம்மாள் (40).

கடந்த சில நாட்களாக இவர் காய்ச்சலால் அவதிபட்டு வந்தார். இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அங்கம்மாளுக்கு ரத்த பரிசோதனை செய்த போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலை அங்கம்மாள் பரிதாபமாக இறந்தார்.

மேலும் கடலூரை அடுத்த பண்ருட்டி அருகே உள்ள உறையூரைச் சேர்ந்த மதியழகன் (32), குறிஞ்சிப்பாடியை சேர்ந்த மோனிஷா (22) ஆகியோரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் 2 பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.



Similar News