செய்திகள்

கடலூர்: குடும்ப பிரச்சினையில் கணவன்-மனைவி தற்கொலை

Published On 2017-09-12 11:21 GMT   |   Update On 2017-09-12 11:21 GMT
தாய்-தந்தை தற்கொலை செய்து கொண்ட உடலை பார்த்து அவர்களது மகள்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
கடலூர்:

கடலூர் முதுநகர் மணக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சீத்தாலட்சுமி (30). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று இரவு வெங்கடேசன், அவரது மனைவி மற்றும் மகள்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் வெங்கடேசனும், அவரது மனைவி சீத்தாலட்சுமியும் கண் விழித்து எழுந்தனர். வீட்டில் வைத்திருந்த வி‌ஷத்தை எடுத்து வெங்கடேசன் திடீரென குடித்தார்.

சிறிது நேரத்தில் வெங்கடேசன் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சீத்தாலட்சுமி கதறி அழுதார். பின்னர் அவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் சேலையால் சீத்தாலட்சுமி தூக்குப்போட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த 3 குழந்தைகளும் கண் விழித்தனர். வெளியே ஓடி வந்து தாயாரை காப்பாற்றுமாறு கூக்குரலிட்டனர்.

சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் சீத்தாலட்சுமியை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சீத்தாலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

கணவன்-மனைவி தற்கொலை செய்தது குறித்து முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மணக்குப்பம் பகுதிக்கு விரைந்து வந்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக வெங்கடேசனும், அவரது மனைவி சீத்தாலட்சுமியும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட தாய்-தந்தை உடலை பார்த்து அவர்களது மகள்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

Similar News