தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் திருப்போரூர் எம்.எல்.ஏ. வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
மாமல்லபுரம்:
டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் 19 பேர் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர். இவர்களில் திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ. கோதண்டபாணியும் ஒருவர். அவரது வீடு மாமல்லபுரம், அம்பாள் நகரில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.
அவர்கள் அம்மாள் நகரில் உள்ள கோதண்டபாணி எம்.எல்.ஏ.வின் வீட்டை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் எம்.எல்.ஏ.வின் உருவ பொம்மையையும் தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கலைந்து போகச் செய்தனர்.
இதற்கிடையே காஞ்சீபுரம் மாவட்ட செயலாளராக கோதண்டபானி எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டு பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
மேலும் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து மாமல்லபுரம் டி.எஸ்.பி. எட்வர்டு உத்தரவுப்படி கோதண்டபானி எம்.எல்.ஏ. வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.