செய்திகள்

மின்சார வயரை இழுத்த 11 மாத ஆண் குழந்தை மின்சாரம் தாக்கி பலி

Published On 2017-08-16 05:24 GMT   |   Update On 2017-08-16 05:24 GMT
ஈரோடு அருகே மின்சார வயரை இழுத்த 11 மாத ஆண் குழந்தை மின்சாரம் தாக்கி பலியானது. இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:

ஈரோடு கருங்கல் பாளையம் கே.ஏ.எஸ்.நகர் மரப்பாலம் 2-வது வீதியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது26). இவருக்கு 11 மாதமே ஆன நித்திஷ் என்கிற ஆண் குழந்தை இருந்தது.

நேற்று காலை நித்திஷ் வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது டி.வி. அருகே மின்சாரம் வரும் ஒயரை பிடித்து இழுத்தான். எதிர்பாராத வகையில் நித்திஷ் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் தூக்கி வீசப்பட்ட நித்திஷ் மயக்கம் அடைந்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நித்திஷ் பெற்றோர் அவனை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நித்திசை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே நித்திஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதை கேட்டு நித்திஷ் பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போன்று குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் கைபடும் அளவுக்கு எந்த பொருட்களையும் வைக்க கூடாது என்று போலீசார் தெரிவித்தனர்.

இன்று குழந்தை நித்திஷ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News