தமிழகத்தில் எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன்
சேத்தியாத்தோப்பு:
கடலூர் மாவட்டம் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சேத்தியாத்தோப்பில் கடை வீதியில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:-
தமிழகத்தில் நடந்து வரும் மக்களின் பல்வேறு பிரச்சினைக்கு குரல் கொடுப்பது த.மா.கா.தான். திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். 5 ஆண்டிற்கு ஒருமுறை திராவிட கட்சிகள் மாற்றி மாற்றி ஆட்சி செய்தாலும் மக்களுக்காக யாரும் பாடுபடவில்லை. இதற்கு குரல் கொடுத்து வருவது மட்டும் இல்லாமல் மீனவர் பிரச்சினைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைத்து மக்களுக்காகவும் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற செயல் பாட்டில் உள்ளது தமிழ்மாநில காங்கிரஸ் என்பதை மக்கள் உணர்கின்றனர்.
தமிழகத்தில் எந்த ஒரு கட்சியும் தனித்து ஆட்சிஅமைக்க முடியாது அது மறைந்த ஜெயலலிதாவோடு முடிந்து விட்டது. இனி கூட்டணி ஆட்சிதான். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது.
நீட் தேர்வால் மாணவ-மாணவிகள் மனவேதனை அடைந்து வருகின்றனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர் மாவட்டம் அதிக அளவில் மீனவர்கள் வசித்து வருகின்றனர். மீன்வர்கள் பிரச்சினைக்கு மத்திய மாநில அரசு முற்றப்புள்ளி வைக்கவேண்டும். கதிராமங்கலம் விவசாயிகள் கைது செய்யப்பட்டதினை விடுதலை செய்யவேண்டும்.
நெய்வேலியில் நிலம் கொடுத்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யவில்லை. உடன்பணி நிரந்தரம் செய்யவேண்டும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 26 நாட்களை குறைத்து 19 நாட்களாக குறைத்து பணி வழங்கி உள்ளது. இதனை உடன் நடவடிக்கை எடுத்து 26 நாட்கள் பணிபுரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி. தேவை தான் அதற்கு உணவு பொருட்களுக்கு வரி தீப்பெட்டி உற்பத்தி தொழிலாளர்கள் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பட்டாசு தொழிற்சாலை, நெசவாளர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும். இல்லை என்றால் ஆகஸ்ட் 2-வது வாரத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தும்.