செய்திகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டத்தில் கட்சி தலைவர் திருமாவளவன் பேசிய போது எடுத்த படம்.

தமிழகத்தில் மதவாத சக்திகள் ஆட்சியை பிடிக்க விடமாட்டோம்: திருமாவளவன்

Published On 2017-07-28 11:53 IST   |   Update On 2017-07-28 11:53:00 IST
தமிழகத்தில் மதவாத சக்திகள் ஆட்சியை பிடிக்க விடமாட்டோம் என கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேசினார்.
கடலூர்:

அம்பேத்காரின் 125-வது பிறந்த நாள் நிறைவு விழா பொதுக்கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் நடந்தது.

கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அம்பேத்கார் பிறந்த நாள் விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பாராளுமன்றத்திலும் அம்பேத்கார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திரமோடி சாதாரண குடும்பத்தில் பிறந்த நான் பிரதமர் அளவுக்கு உயர்ந்ததற்கு அம்பேத்கார் தான் காரணம் என்று கூறி இருக்கிறார்.

பிரதமர் எதை சொன்னாலும் நம்ப மாட்டேன். ஆனால் இதை நம்பி தான் ஆக வேண்டும். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் உயர்ந்தவராக வர முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் அம்பேத்கார்.

மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்தாலும், செயல்திட்டங்களை வகுத்து கொடுப்பது ஆர்.எஸ்.எஸ். தான். இந்த இயக்கத்தில் 13 ஆயிரம் பேர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். இவர்களின் திட்டம் இந்து மதத்தை பரப்புவது, இந்தியாவை இந்து நாடாக உருவாக்க வேண்டும் என்பது தான். இதில் இந்து முன்னணி, விசுவ இந்து பரி‌ஷத் உள்ளிட்ட பல்வேறு துணை அமைப்புகளும் உள்ளன. இவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறுவதை தடுக்க தொடர் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கும் வரை தமிழகத்தில் சாதி, மத வெறியர்களால் சென்னை கோட்டையில் கொடியேற்ற முடியாது. ஜெயலலிதா மறைந்துவிட்டதால், ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை பிடிக்க நினைக்கும் மதவாத சக்திகளை விடமாட்டோம்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை கண்டு பயப்படுகிறவர்கள் தான் அவர்களுக்கு எதிராக பேசுகிறார்கள். எங்களுக்கு எந்த பயமும் இல்லை. ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு வரலாம். அப்படி ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால், அவர்களை களத்தில் சந்திக்கிற துணிச்சல் விடுதலை சிறுத்தைகளுக்கு உண்டு. சேர்ந்தும், பிரிந்தும் எதிர்ப்போம். தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக வலிமை மிக்க கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. அம்பேத்காரின் கொள்கையை உயர்த்தி பிடிக்கிற கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சிதான். தமிழக அரசியலில் மாபெரும் சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வளர்ந்து வருகிறது.

இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

Similar News