பெசன்ட் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளி படுகொலை
திருவான்மியூர்:
சென்னை பெசன்ட் நகர் 3-வது அவென்யூவில் எலியட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இந்த குடியிருப்பில் அடையாறு தாமோதரபுரம் புது நகரை சேர்ந்த சந்திரன் (62) என்பவர் கடந்த 5 வருடமாக காவலாளியாக வேலைபார்த்து வந்தார்.
நேற்று இரவு சந்திரன் காவல் பணியில் இருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர்.
அவர்கள் சந்திரனை இழுத்து போட்டு இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார்கள். அவரது அலறல் சத்தம் கேட்டு குடியிருப்பில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
அவர்கள் வந்ததை பார்த்ததும் அந்த வாலிபர்கள் ஓடிவிட்டனர்.
உயிருக்கு போராடிய சந்திரனை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.கொலை செய்ய வந்த வாலிபர்கள் 3 பேரும் முகத்தை துணியால் மூடி மறைத்து இருந்ததால் அடையாளம் தெரியவில்லை.
சந்திரனை கொன்ற கொலையாளிகள் யார்? எதற்காக கொன்றார்கள்? என்ற விபரம் தெரியவில்லை. இது பற்றி பெசன்ட் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.