செய்திகள்

மோசடி வழக்கில் சிக்கிய அமைச்சர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: ஈஸ்வரன் கேள்வி

Published On 2017-05-08 15:13 IST   |   Update On 2017-05-08 15:13:00 IST
மோசடி வழக்கில் சிக்கிய அமைச்சர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோடு:

பெருந்றையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எழுச்சி ஏற்பட்டது போல் இப்போது மதுக்கடைகளுக்கு எதிராக இளைஞர்களிடம் குறிப்பாக பெண்களிடம் எழுச்சி ஏற்பட்டு உள்ளது. இனிமேல் தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் ஒரு மதுக்கடை கூட திறக்க முடியாது.

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடந்து வருவதாக முதல்- அமைச்சரும் அவரது அமைச்சர்களும் சொல்லி வருகிறார்கள். அதுதான் இல்லை தமிழகத்தில் ஒரு ஆட்சி நடப்பதாகவே தெரியவில்லை.

வருமானவரித்துறை சோதனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் சிக்கி உள்ளார். மற்றொரு அமைச்சரான காமராஜ் மீது மோசடி வழக்கு போடப்பட்டுள்ளது. மறைந்த ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால் இவர்கள் 2 பேரும் அமைச்சர்களாக நீடிக்க முடியுமா? இவர்கள் மீது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்காதது ஏன்? உடனடியாக அவர்களை பதவி விலக சொல்ல எடப்பாடி பழனிச்சாமி தயாரா?

ஈரோட்டில் ஜூன் 6-ந்தேதி நதிகள் இணைப்பு மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் டெல்லியில் நடந்த அறப்போராட்டத்தில் பங்கேற்ற தென்னிந்திய நதிநீர் இணைப்பு குழு தலைவர் அய்யாக்கண்ணுக்கு பாராட்டு விழாவும் நடத்தப்படும்.

இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.

Similar News