செய்திகள்

கடலூரில் பெண்ணை கொன்று நகை-பணம் கொள்ளை: 2 வாலிபர்கள் சிக்கினர்

Published On 2017-04-22 06:20 GMT   |   Update On 2017-04-22 06:20 GMT
கடலூரில் பெண்ணை கொன்று நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதில் 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

கடலூர்:

கடலூர் முதுநகர் அருகே உள்ள நொச்சிக்காட்டை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 75). இவர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் ராஜ லட்சுமியின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். அவர் தடுத்ததால் கொள்ளையர்கள் ராஜலட்சுமியின் கை, கால்களை கட்டிப்போட்டு கழுத்தை நெரித்தனர். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் கொள்ளையர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 2 வாலிபர்கள் ராஜலட்சுமியின் வீட்டுக்குள் புகுந்து அவரை தாக்கி ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வாலிபர்கள்தான் ராஜலட்சுமியை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

அவர்களை பிடிக்க கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன் தலைமையில் ஒருபடையும், இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையில் ஒருபடையும் அமைக்கப்பட்டது.

இந்த கொலை-கொள்ளை தொடர்பாக வைத்தியநாதன், அருண்ராஜ் ஆகிய 2 வாலிபர்கள் தனிப்படை போலீசார் பிடியில் சிக்கி உள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News