செய்திகள்
மரத்தில் ஏறி கைதிகள் போராட்டம் நடத்தினர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் வேடிக்கை பார்த்த காட்சி.

புதுக்கோட்டை சிறையில் கைதிகள் மரத்தில் ஏறி ‘திடீர்’ போராட்டம்

Published On 2017-04-13 10:45 IST   |   Update On 2017-04-13 10:45:00 IST
புதுக்கோட்டை சிறையில் இன்று கைதிகள் மரத்தில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட கிளை சிறை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ளது. இங்கு சுமார் 400 கைதிகள் உள்ளனர். இவர்கள் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் ஆவர். சிறையில் கைதிகள் சில பொருள்கள் பயன்படுத்துவதற்கு தடை உள்ளது.

இந்த நிலையில் சிறையில் உள்ள சில கைதிகள் தங்களுக்கு பீடி வேண்டும் என கேட்டு வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு கைதிகள் தங்களுக்கு பீடி வழங்ககோரி சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி போராட்டம் நடத்தினர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கிழே இறக்கினர்.

இந்த நிலையில் இன்று காலை மீண்டும் 2 கைதிகள் பீடி கேட்டு அடம்பிடித்தனர். அங்குள்ள மரத்தில் ஏறிய 2 கைதிகளும் மரத்தின் உச்சிக்கு சென்று விட்டனர். அவர்கள் தவறிகிழே விழுந்து விடக்கூடாது என்பதால் அதிகாரிகள் அவர்களை கீழே இறங்கும் படி கூறினர்.

காலை 7 மணிக்கு மரத்தில் ஏறிய கைதிகள் 2 பேரும் பீடி வழங்கினால் மட்டும் தான் கீழே இறங்குவோம் என அடம்பிடித்தனர். சுமார் 2 மணிநேரம் மரத்தின் உச்சியில் நின்றபடி கைதிகள் போராட்டம் நடத்தினர்.

கைதிகள் போராட்டத்தால் புதுக்கோட்டை சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழியாக சாலையில் சென்ற மக்களும் கைதிகள் போராட்டத்தை வேடிக்கை பார்த்தபடி சென்றனர். அதன் பிறகு அதிகாரிகள் சமரசத்தை ஏற்று 9 மணிக்கு கைதிகள் மரத்தில் இருந்து கீழே இறங்கினர்.

அதன்பிறகு சிறை அதிகாரிகள் அவர்களை எச்சரித்து, சிறை அறையில் பூட்டி வைத்தனர். இந்த சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News