செய்திகள்

சிதம்பரம் அருகே பல்கலைக்கழக ஊழியர் கொலையா?: போலீசார் விசாரணை

Published On 2017-04-12 12:16 GMT   |   Update On 2017-04-12 12:16 GMT
சிதம்பரம் அருகே பல்கலைக்கழக ஊழியர் மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரது மனைவி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிதம்பரம்:

சிதம்பரம் அருகே உள்ளது கொத்தங்குடி பகுதியை சேர்ந்தவர் ரங்கபாஷியம் (வயது 36). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஊழியராக வேலைப்பார்த்து வந்தார். இவருக்கு மலர் என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

நேற்று இரவு தனது நண்பர்கள் சிவகுருநாதன், அன்பரசன் ஆகியோருடன் ரங்கபாஷியம் சிதம்பரம் அருகே பின்னத்தூருக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். அவர்கள் மது அருந்தியதாக தெரிகிறது.

இன்று காலை ரங்கபாஷியம் தலையில் காயங்களுடன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் காரில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் ரங்கபாஷியம் இறந்து விட்டார்.

இது குறித்து அவரின் மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக அண்ணாமலை நகர் போலீசில் மலர் புகார் செய்தார். இதையடுத்து பல்கலைக்கழக ஊழியர் ரங்கபாஷியம் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு வகையில் இறந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News