செய்திகள்

பெருந்துறை அருகே விபத்து: 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி

Published On 2017-03-21 11:51 GMT   |   Update On 2017-03-21 11:51 GMT
பெருந்துறை அருகே இன்று விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறை:

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்தவர் கதிரவன் (வயது40). டிராக்டர் புரோக்கர். டிராக்டர்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார்.

இவரது மனைவி ஈஸ்வரி (33). இவர்களுக்கு நகுலன் (12), ஜெயபாரதி(7) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறில் ஈஸ்வரி தனது 2 பிள்ளைகளை அழைத்து கொண்டு நாமக்கல்லில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

மனைவியையும் , குழந்தைகளையும் பிரியமனம் இல்லாத கதிரவன் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நாமக்கல் சென்று மனைவியிடம் சமரசம் செய்தார்.

கணவான் சமரசத்தை ஏற்று கொண்ட ஈஸ்வரி குழந்தைகளுடன் கணவருடன் செல்ல முடிவு செய்தார் .

அதன்படி அவர்கள் நேற்று இரவு ஆம்னி வேனில் நாமக்கல்லில் இருந்து பெருமாநல்லூருக்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தனர்.

வேனை கதிரவன் ஓட்டி சென்றார். அவரது மனைவி , 2 குழந்தைகள் உள்பட 8 பேர் வேனில் சென்றனர்.

இன்று அதிகாலை 2.30மணியளவில் வேன் பெருந்துறை அருகே பைபாஸ் ரோட்டில் சென்ற போது நாமக்கல்லில் இருந்து செங்கல் லோடு ஏற்றி கொண்டு ஒரு லாரி கோவை நோக்கி சென்று கொண்டு இருந்தது.  ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக மெதுவாக சென்று ஓரங்கட்டியது.

இந்த சமயம் பின்னால் வந்த வேன் எதிர்பாராத வகையில் லாரியின் பின்புறம் “டமார்” என்ற சத்தத்துடன் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் வேனில் வந்த ஈஸ்வரி.லட்சுமி (70),சந்திரன் (54), ஆகிய 3 பேரும் சம்பவ இட த்திலேயே இடிபாடுகளுக்குள் சிக்கி பாதாபமாக இறந்தனர்.

மேலும் கதிரவன் , நகுலன், ஜெயபாரதி, மனோகரன் (27), மற்றொரு லட்சுமி (54) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

Similar News