சீர்காழி அருகே வாய்க்காலில் பஸ் கவிழ்ந்து 47 பயணிகள் காயம்
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து இன்று காலை 5.30 மணியளவில் பழையாறைக்கு ஒரு அரசு பஸ் சென்றது. இந்த பஸ் சீர்காழி அருகே உள்ள மடவாமேடு காளியம்மன் கோவில் வளைவு பகுதியில் சென்றபோது கடும் பனிபொழிவு காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர வாய்க்கால் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் பஸ்சில் காயமடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கூழையார் வடக்கு தெருவை சேர்ந்த பாப்பாத்தி (வயது 60), அதேபகுதியை சேர்ந்த காந்திமதி (56), தொடுவாயைசேர்ந்த பட்டு (40), அஞ்சம்மாள் (35) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மேலும் இந்த விபத்தில் நிம்மேலியை சேர்ந்த பஸ்டிரைவர் ஞானகுமார் (41), மாதிர வேளுர் கீழவரவுக்குடியை சேர்ந்த கண்டக்டர் பெரியார் (35) உள்பட 41 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.